Sunday, December 16, 2007

சார் எதுனா வேல குடு சார்

அதிகாலை 5 மணிக்கு முழிப்பு வந்ததுமே முன்னிரவின் பரோட்டா சால்னா மற்றும் மிச்சமிருந்த கால் பாட்டில் பியரின் வாடையும் காளி அவதாரத்துடன் என் மனைவி சொன்ன "நான் இல்லன்னா எப்படி வீடும் நீங்களும் நாறிப்போவிங்கன்னு பாருங்க.நான் திரும்பி வந்து அப்போ பேசிக்கறேன்" வார்த்தையும் நினைவுக்கு வந்தது.

ஒரு திறமையான சைக்யாட்ரிஸ்ட் நான். என் மனைவியை சமாளிக்க முடியவில்லயே.

டீ சாப்பிடவேண்டும், என் சைக்கோ மனைவி போகும்போது பால் பாக்கெட்டோடு பேப்பரையும் பழிவாங்கவென்றே நிப்பாட்டிவிட்டு போய்விட்டாள்.சரி ஒரு வார குப்பையை சுத்தம் செய்ய வேண்டும். குறைத்தது இந்த பியர் பாட்டில்களையாவது, திடீரென்று வந்து நின்றாளென்றால் மாட்டிக்கொள்வேன்.

ஒரு வாரகாலத்து பியர் பாட்டில்களை ஒரு சாக்கில் கட்டினேன்.என் வீட்டுக்கு வெளியில்தான் குப்பைத்தொட்டி. அது வழிந்து கிடந்தது.நாலு நாளாக அதும் அள்ளப்படவில்லை. அள்ளுபவன் மனைவியும் ஊருக்குப் போயிருக்கக்கூடும். சாக்கை அவிழ்த்து குப்பைதொட்டிக்கு அருகில் கொட்டினேன். எனக்கு முன்பாக குடித்துவிட்டு போட்ட இன்னபிற மது பாட்டில்களும் கிடந்தது.நம்ம சாதிக்காரன் நிறைய இருக்கானுகடோய்.

காலி சாக்கை அப்படியே காம்பவுண்ட் கேட் மேல் போட்டுவிட்டு பக்கத்து தெரு டீக்கடைக்கு நடந்தேன்.சூடான டீயை குடித்தவாறே சாப்ட்வேர் வேலைக்கும் அதனால் சாதாரண ஆசாமிக்கு வரும் மனச்சிதைவுக்குமான என் ஆராய்ச்சியை பற்றி சிந்தித்தேன்.

திரும்பி வீட்டுக்கு வருவதற்குள் மூன்று பேர் எதிரில் கேட்டுவிட்டர்கள்,"பொண்டாட்டி வீட்டில் இல்லாம ஒரே தண்ணியும் மஜாவுமா?".அதான் வீட்டுக்கு முன்னால் கிடக்கும் பியர்பாட்டில்கள் சொல்கிறதே.

ஆஹா பக்கத்து வீட்டு மாமி வாக்கிங் போற டைம் இது. பாத்துட்டா ஊருல மத்த பய குடிச்சதுக்கும் சேர்த்து என்ன போட்டு கொடுத்துடுவா.நடை வேகமானது. அப்படியே கேட் மேல் இருந்த சாக்கை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்து நான் குடித்த மற்றும் ஊரில் எவனோ குடித்த மொத்த பாட்டிலையும் சாக்கினுள் போட்டேன்.சாலைக்கு மறுபுறம் ஒரு தண்ணீர் இல்லா 40 அடி ஆழ கிணறு. அதற்குள் சாக்கு மூட்டையை போட்டேன். ஏற்கெனவே கிழிந்திருந்த சாக்கு பாட்டில் எடையை தாங்காமல் கிழிந்தது.பாட்டில்கள் சிதறி நல்ல சத்ததுடன் ஒன்றொன்றாக உடைந்தவாரே உள்ளே விழுந்தது.சத்தம் கேட்டு மாமி வெளியே வந்தால் அவ்வளவுதான். ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டேன்.

மூச்சு வாங்கியது, என்ன கொடுமையடா இது. தனி ஒருவனுக்கு குடிக்க கூட சுதந்திரம் இல்லையா என்று நினைக்கும் போதே கதவு தட்டப்பட்டது. போச்சு மாமியாகத்தான் இருக்கும், வேகமாக தலையை கலைத்துக்கொண்டேன் கண்ணை தேய்த்து விட்டு தூக்கத்தில் எழுந்து வரும் பாவனையில் கொட்டாவி விடுவது போல வாயையும் கதவையும் திறந்தேன்.

அப்பாடா மாமி இல்லை. நல்ல குண்டு பூசனிக்காய் போல ஒருவன் "சார் எதுனா வேல குடு சார்" என்றான்.நல்லா கெளப்பறாய்ங்கடா பீதிய, சரியான நேரத்துக்குதான் வந்திருக்கான் என்று நினைத்தபடி "வீட்டுக்கு முன்னால் கிடக்கும் குப்பையெல்லாம் கூட்டு, உள்ளே கொஞ்சம் குப்பை இருக்கு அதைக்கொண்டு போயி வெளீல போடு" என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் அள்ளி வைத்திருந்த குப்பையை எடுத்து வந்தேன்.

அந்த நேரத்திற் வெளிப்பக்கம் முழுவதுமாக கூட்டி வைத்து அதே கையை கட்டிய பணிவுடன் "வேற எதுனா வேல குடு சார்" என்றான்.என்ன வேகம்டா இந்த குப்பையை வெளியே போட்டுட்டுவா என்று சொல்லி விட்டு வீட்டை பூட்டினேன். போய் பேப்பர் வாங்கிவர வேண்டும். காலையில் பேப்பர் படித்துக்கொண்டுதான் என் கடனை டாய்லெட்டில் தீர்க்க முடியும்.

பூட்டி முடித்து நிமிர்ந்தால் அவன் மறுபடி "எதுனா வேலை இருந்தா கொடு சார்" ஆகா என் மனநலமருத்துவ மூளை விழித்துக்கொண்டது.இவனிடம் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. வேலை செய்து கொண்டே இருக்கும் ஒரு மேனியா இருக்கிறதே. நான் இது வரைக்கும் அந்த டைப் பேஷண்டை சந்தித்ததே இல்லையே. ஒரு வேளை அப்படி இருக்குமோ. மாட்டுனான்யா ஒரு சோதனை எலி.அதற்குள் திரும்ப "எதுனா வேலை இருந்தா குடு சார்" இந்த முறை அவன் குரல் சற்று கடுமையாக வந்தது. "காம்பவுண்டுக்குள் இருக்கும் எல்லா புல்லையும் கையால் பிடுங்கி சுத்தம் செய்து வை.புல்லையெல்லாம் தெருக்கடைசியில் இருக்கும் குப்பைதொட்டியில் போட்டுவிடு. இதெல்லாம் நான் வருவதற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று நானும் குரலை கடுமையாக்கி சொன்னேன்.

தலையை ஆட்டிவிட்டு உடனே அவன் செயலில் இறங்கினான். நான் பேப்பர் வாங்கி நடந்து வந்து பாத்தால் காம்பவுண்ட் சுத்தமாக இருந்தது. ஒரு புல் பூண்டு காணோம்.கேட் உள்ளே காலை வைக்கும் போதே "எதுனா வேல குடு சார்" என்று ஆஜராகி விட்டான். முதல் தடவையாக எனக்கு மாட்டிகிட்டோமோ எனும் பயம் வந்தது.சரி அவனால் முடியாத விஷயமாக சொல்வோம் என்று என் ஆராய்ச்சி மூளை கணக்குப்போட்டது. அதற்குள் மூன்றாவது "எதுனா வேலை குடு சார் வந்து விட்டது, மூண்றாம் தடவை சொல்லும் போதே அதட்டலாகவும் முகம் கடுமையாகவும் மாற ஆரம்பித்துவிட்டது.

டக்கென்று காம்பவுண்டை ஒட்டி இருந்த மரத்தின் மீது இருந்த கருப்பு குருவியை காட்டி அதைப்பிடித்துவா என்று சொல்லி விட்டேன். உண்மையில் எனக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை."தங்கம் நீ மட்டும் இருந்திருந்தா இந்நேரம் நீ கொடுக்கும் வேலையில் அவன் வேலையென்ற வார்த்தையையே மறந்திருப்பான்" என என் மனைவியை நினைத்துக்கொண்டேன்.இவனுக்கு அவளையே சகிச்சுக்கலாம் போல.

ஆகா என்ன இது மரத்தில் ஏறுகிறான். கிளையில் குரங்கு மாதிரி தாவி அந்த குருவி பின்னால் பதுங்கி அய்யய்யோ அந்த குருவியை பிடித்தே விட்டான்.அய்யோ திரும்ப என்ன வேலை சொல்வது அவனுக்கு. எனக்கு வியர்த்து விட்டது.குருவியை என் கையில் கொடுத்துவிட்டு திரும்ப "எதுனா வேலை இருந்தா குடு சார், எதுனா வேலை இருந்தா குடு சார்". இந்த தடவை திரும்ப வேலை கேட்கும் கால இடைவெளி குறைய ஆரம்பித்துவிட்டது அதே நேரத்தில் குரல் டெசிபல் ஏற ஆரம்பித்து விட்டது.என்ன சொல்வது பதட்டமானேன்.

அது ... வந்து...வேலை...ஆங்...இது... இந்த குருவி பேரு என்ன?

கரிக்குருவி சார்

அதை எப்படி நான் நம்பறது தப்பா சொல்லுற ஆதாரம் கொடு,

சார் இதை கரிகுருவி, கரிச்சான்குருவி, கரிச்சாங்குஞ்சு,ஆனைச்சாத்தன், இப்படி பல பேருல சொல்வாங்க, இது ரொம்ப தைரியமான பறவை. பாம்பு, கழுகெல்லாம் இத பாத்து பயப்படும். இது கூடு கட்டுன மரத்துல இதோட பாதுகாப்பு இருக்கும்ன்னு மற்ற பறவைகள்ளாம் விரும்பி கூடு கட்டும்.ஆண்டாள் திருப்பாவைல ஏழாம் நாள் எழாவது பாடல்ல
கீசு கீசென்ற எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து...
.......

அவன் பாடப்பாட ஆஹா இது தமிழ் M.A பார்ட்டியா? அவன் இடுப்பில் துப்பாக்கி வத்திருக்கிறானா என்று பார்த்தேன். வடநாட்டில் கட்டுவதுபோல பின்னால் சொருகி இருந்த வேட்டியில் துப்பாக்கி இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை. சட்டையும் போடாததால் அவன் தாக்குவதற்கு ஆயுதம் எதுவும் வைத்திருக்க வாய்ப்பு இல்லை.

தமிழ் பார்ட்டிங்களை ஈஸியாக சமாளித்து விடலாம் தமிழைத்தவிர வேறு எதையும் தெரிந்து வைத்திருக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு.

என் மாமனார் சீதனமென்ற பெயரில் என் மனைவியுடன் சேர்த்து என் தலையில் கட்டிவிட்ட 5 வருடமாக ஓடாத பழைய ஸ்கூட்டரை காட்டி, "பாட்ட நிப்பாட்டு, இதை சரி செய்" என்றேன். அவன் ஸ்கூட்டரை சாய்த்துபோட்டு ஒவ்வொரு பார்ட்ஸையும் கழட்ட ஆரம்பித்த போதே புரிந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் சரி செய்துவிட்டு வந்து திரும்ப வேலை கேக்கப் போகிறான்

எனக்கு இவனை சமாளிக்க யோசிக்க கொஞ்சம் நேரம் வேண்டும்.கொஞ்சம் வில்லத்தனமாக யோசிக்க வேண்டும். அதற்குள் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகி உர்ர் உர்ரென்று ஆக்ஸிலேட்டரை முறுக்கிப்பார்க்கும் சத்தம் கேட்டது
ஒரு முடிவுக்கு வந்தேன் கதவுக்கு பக்கத்தில் இருக்கும் அந்த பக்கெட்டை எடுத்து கதவுக்கு வெளியே தெரியும் அடிபைப்பில் தண்ணி அடித்து நிரப்பி பக்கத்தில் இருக்கும்
கிணற்றில் ஊத்து. கிணறு நிரம்பும் வரையில் ஊற்ற வேண்டும். சொல்லும் போதே அவன் என்னை மெண்டல் என்று சொல்லிவிடுவானோ என்று ஒரு பயம்தான். ஆனால் அவன் "சரி சார்" என்றவாரே பக்கெட்டை எடுத்து பைப்பில் மாட்டி பைப்பை அடிக்க ஆரம்பித்தான்.

சிக்கலான நேரங்களில் எனக்கு சிந்திக்க ஒரு சிகரெட் வேண்டும். பக்கத்து தெரு கடையை நோக்கி நடையை போட்டேன். ஒரே யோசனை. கண்டிப்பாக இது மனச்சிதைவுதான். ஆனால் என்ன மேனியா என்று கண்டுபிடிக்க வேண்டும். சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறான். ஆனால் இவனுக்கு ட்ரீட்மெண்ட் செய்தால் பீஸ் யார் தருவார்கள். விரட்டினாலும் போக மாட்டேங்கிறான். இவ்வாறாக என்னுடைய பல சிந்தனைகள் என் வாயில் முணுமுணுப்பாக வெளியில் வந்தது.

கடைக்கு பக்கத்தில் ஒரு தாடி வைத்த மனநிலை தவறிய தோற்றத்துடன் ஒரு நடுவயது ஆள் நானாக பேசுவதைப்பாத்து சிரித்தான். சிகரெட் வாங்கிக்கொண்டே எரிச்சலுடன் நான் "என்னடா சிரிப்பு?" என்றேன். எனக்கு இருந்த கோபத்தை யார் மீதாவது காட்டியே ஆக வேண்டும்.

அவன் "நீ யார்?" என்றான்.

"நான் டாக்டர்"என்றேன்
"என்ன டாக்டர்"என்றான்
"சைக்யாட்ரிஸ்ட்"என்றேன்
"நான் சைண்டிஸ்ட்"என்றான்

எனக்கு இன்றுதான் ஏழரை சனி, சனி வக்கிரம் இன்ன பிற ஜாதக சனி வஸ்து சமாச்சாரங்கள் மேல் நம்பிக்கை வந்தது.

மண்டையில் ஒரு போடு போடலாமான்னு யோசித்தேன்.அதற்குள் அவனே ஒரு மாசத்துக்கு வீதியிலேயே சுத்துனீன்னா நீயும் இப்படித்தான் இருப்ப என்றான்.

"இப்ப உனக்கு என்ன வேணும். நீயும் எதுனா வேல குடு சார்ன்னு சொல்லிடாத" என்று ரொம்பவே நொந்து போய் சொன்னேன்.

சட்டேன்று அவன் முகம் மாறியது. "அவன் அங்கேதான் இருக்கானா" என்றான்.

நான் ஒன்றும் புரியாமல் "ஆமாம்" என்றேன்.

"கடைசியா என்ன வேலை கொடுத்தாய்?" என்று கேட்டான். சொன்னேன்."வெரிகுட் நமக்கு டைம் இல்லை உடனே உன் வீட்டுக்கு போலாம்" என்றான்.
அவன் பரபரப்பு எனக்கு புரியவில்லை. ஆனால் அவனை நன்றாக தெரிந்து வைதிருக்கிறான் என்று மட்டும் தெரிந்தது.நடப்பது எதிலும் என் பங்கு இப்போதைக்கு இல்லை என்று தெரிந்தது

வீட்டை நெருங்கும்போது தெரிந்த காட்சியில் என் இதயம் ஸ்தம்பித்தது. அந்த தண்ணி இல்லா கிணறு வழிய ஆரம்பித்திருந்தது.என் கைகள் நடுங்கின.

கிணற்றை நிரம்பிய கடைசி பக்கெட்டுடன் எங்களை நெருங்கினான் அவன்.

உடனெ தாடிபார்ட்டி என்னிடம், "அந்த பக்கெட்டில் கிணற்றீல் இருந்து தண்ணீயை எடுத்து வெளியில் ஊற்றி கிணற்றை காலி பண்ண சொல்லு" என்றான். தயக்கமின்றி அவனிடம் ஆணையிட்டேன், அதே பணிவுடன் போய் தண்ணியை ஒவ்வொரு பக்கெட்டாக வெளியே ஊற்ற ஆரம்பித்தான்.

தாடி என்னிடம் "நமக்கு டைம் இல்லை 5 நிமிடத்தில் அவன் முடித்து விடுவான். அதற்குள் நாம் செயல் பட வேண்டும்" என்றான்.

இந்த நேரத்தில் நான் அவன் சொன்னால் தலையை வெட்டிக்கொள்ள கூட தயாராக இருந்தேன்.

போய் வீட்டில் எதாவது ஒரு பாட்டில் எடுத்து வா குயிக் என்றான்.எல்லா பாட்டிலையும் காலையிலேயே தூக்கிப்போட்டுவிட்டேனே என்றேன்.முட்டாள் சமையலறையில் எதாவது போட்டு வைத்திருப்பாள் உன் மனைவி ஓடு போய் எடுத்துக்கொண்டு வா,ஒரே நிமிடம்தான் இருக்கிறது என்றான்.சமயலறைக்கு ஓடினேன்.

எல்லாமே இப்போ புதிதாக வந்த பிளாஸ்டிக் ஜார்கள்தான் இருந்தது.எதை எடுப்பது.
"எதுனா வேலை கொடு சார்" வாசலில் சத்தம் கேட்டது. எனக்கு சப்த நாடியும் ஒடுங்கியது.

இதோ ஹார்லிக்ஸ் பாட்டில்.அதை எடுத்துக்கொண்டு வெளியில் வருவதற்குள் அவன் 5வது தடவையாக "எதுனா வேலை கொடு சார்" சொல்லி இருந்தான்.

அவன் முகம் சிவந்திருந்தது.முகம் கொடூரமாக மாறியிருந்தது.

தாடி என்னை பாத்தவுடன் "பாட்டில் மூடியை கழட்டு உள்ளே இருப்பதை வெளில கொட்டு "என்று கத்தினான்.


"சார் வேலை கொடுப்பியா இல்லையா சார்?" இது அவன்

"மூடிய என்னிடம் கொடு" கத்தினான் தாடி

"வேலை கொடுக்க முடியாதா உன்னால?" இது அவன்

"பாட்டிலுக்குள்ள போக சொல்லு அவன" கத்தினான் தாடி

"பாட்டிலுக்குள் போ" நடுங்கிப்போய் சொன்னேன்.

சட்டென்று சுருங்கி ஹார்லிக்ஸ் பாட்டிலுல் புகுந்து குத்துகாலிட்டு அமர்ந்தான்.

"இந்த மூடியால மூடு" மூடினேன்.

"கண்காணாத இடத்துல இத எறி. நம்மள மாதிரி யாரும் மாட்டவேணாம், வரட்டுமா, வீட்டுக்கு போய் ஒரு மாசம் ஆச்சு" தாடி போயே விட்டான்.

0 comments: